Sunday, September 6, 2009

சபிக்கும் கணங்கள்

தலைக்குள் புகுந்து
சவப்பெட்டிக்கு
ஆணியடித்துக் கொண்டிருந்தான்

கண்களில், நாசியில்
நீர்வழிய
அவ்வப்போது கண்திறந்து வழிபார்த்து
அவசரமாக அறைக்கு
விரைகிறேன்

கருவில் இருக்கும்
குழந்தையென
சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைப் பூணை
வாசல் படியில்

இப்பொழுது
சபிக்கத் தொடங்குகிறேன்
எல்லோரையும்
கடவுள் உட்பட.

Saturday, August 1, 2009

புறக்கணிப்பு

அச்சுறுத்தல், அவமானம்
புறக்கணிப்பு , தோல்வி
என எல்லாம் ஒன்றாய்
துரத்தும் பொழுதுகளில்
மலை விளிம்பையோ
இரயில் தண்டவாளத்தையோ
விஷ புட்டிகளையோ
அல்லது
சுருக்குக் கயிற்றையோ
நாடுவது சாலச் சிறந்தது .

செல்லப் பிராணிகளை
பரிசுப் பொருட்களை
பிரியத்தின் முத்தத்தை
ஒரு நிமிட தாமதத்தை
மற்றும்
கண்ணீர் துளிகளை
முற்றிலுமாக
புறக்கணித்து விட வேண்டும்

குவிந்து நிற்கும்
எண்ணங்களை அவைகள்
கலைக்கக்கூடும்.

நன்றி - உயிரோசை

Thursday, July 23, 2009

பகிர்ந்து கொள்கிறேன்.



அன்போடு விருதை வழங்கியவர்கள்
நேசமித்ரன் அவர்களும் , வித்யா அவர்களும்.
அவர்களின் அன்புக்கு மிக்க நன்றி.

பகிர்ந்து கொள்ளுதல் எப்பொழுதும்
மகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.
நான் ரசிக்கும் சிலருக்கு ஏற்கனவே
விருது கிடைக்கப்பட்டதால் அவர்களுக்கு
தர இயலவில்லை.அது போக ஆறு பேருக்கு
மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாட்டு
இருப்பதால் சிலருக்கு தர இயலவில்லை.


நிர்வாணம் - ஞானசேகர்

பென்சில் - ஆ.முத்துராமலிங்கம்

வேடிக்கை - கார்த்தி

பட்டாம்பூச்சி விற்பவன் - ரெஜோ

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

எம்.ரிஷான் ஷெரீப்



இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



Sunday, July 19, 2009

குறிப்புகளும் , அது சார்ந்தும்

காலையில்
பூட்டிவிட்டுத்தான்
சென்றிருந்தேன்.

பின்னிரவில் திரும்பியதும்
உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது.

கதவைத் தட்டினேன்

துல்லியமாக
எனது குரலிலேயே
யாரென்ற கேள்வி வந்தது

நடுக்கத்துடன்
நான்தான் என்றேன்


திறக்கப்பட்ட அறையின் சுவரில்
தற்கொலை பற்றிய
குறிப்புக்களை எழுதியிருந்தான்.

0

வழக்கத்தை விட
நீண்டிருக்கிறது இரவு

நிலவற்ற வானில்
பூச்சிகளென அலைந்து கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்

மௌனித்திருக்கிறது
கடல்

எங்கும் வியாபித்திருக்கிறது
பிணநெடி

எல்லா நொடியிலும்
மரணம் நிகழ்த்தப்படுகிறது

தேவதையின் கழுத்தையறுத்தவன்
"இனி விடியப்போவதில்லை ?" என்றான்

கொலையை விட
மேலானது
தற்கொலை
என்றான் குறிப்பெழுதியவன்.

நன்றி- உயிரோசை

Tuesday, July 14, 2009

பற்றுதல்

நினைவு தெரிந்த
நாளிலிருந்து
நின்றிருக்கிறது

அப்பாவிடம் கேட்டிருக்கிறேன்
பாட்டியிடம் கேட்டிருக்கிறேன்
அவர்களுக்கும் அப்படியே

சொல்லிக்கொண்டிருக்கிறேன்
பூமியுடனான அதன்
நேசத்தை

"யாரும் தூக்குப்போட்டுக் கொண்டதில்லையா ?"
என்று கேட்டாள் மறுமுனையிலிருந்து

Saturday, July 11, 2009

இடைவெளி

அடர்ந்து வளர்ந்திருக்கின்றன
மரங்களும் செடி கொடிகளும்
புல்வெளியெங்கும் பனித்துளி
சலனமற்றிருக்கிறது நீர்நிலை
பூக்களின் வாசம்
நிரம்பியிருக்கிறது காற்றில்
பெயர் தெரியாத பறவைகளின்
ஓசை இசையென
வியாபித்திருக்கிறது
இங்கு
முழு சுதந்திரம்
அளிக்கப்பட்டிருக்கிறது
மனமெங்கும் மகிழ்ச்சி

அடரிருளில்
காதைக் கிழிக்கும் இரைச்சலில்
இரண்டடி இடைவெளியில்
பாய்கிறது
எக்ஸ்பிரஸ் இரயில்

இரைச்சலில் சொல்லிக்கொண்டேன்
இடைவெளி
இல்லமலிருந்திருக்கலாமென்று.

Wednesday, July 8, 2009

அது - வாழ்வு .

முழுவதுமாய் புறக்கணித்துவிட்டது
தற்கொலை
புசித்து பசியாறி
மலம் கழித்துச் செல்கின்றன
மிருகங்கள்
கனவுகள் வந்தமர
கிளையேதுமில்லை
அநாமதேயமாய் கிடக்கின்றன
தீர்ந்த மதுப்புட்டிகள்
ஒளிந்துறங்க
வாசல் கடக்கையில்
மறைக்க அனுமதிக்கப்படுகின்றன
நிர்வாணம்
மாதவிடாய் பஞ்சோடு
வீசியெறியப்படுகின்றன
அதுவும், அது சார்ந்த
சகலமும்

நன்றி- உயிரோசை

Monday, July 6, 2009

தடுப்பு

யாராவது முதுகில்
அடித்து விடுகிறார்கள்
பாய்ந்து சத்தமிட்டு
மிரண்டோடுகிறது பூனை
ஏதோ ஒன்று கடித்துவிட்டு
மறைந்து விடுகிறது .

நாயின் குரலில்
கதவில் மோதுகிறது
சாத்தான்
பாம்புகள் நெளிகின்றன
பிணம் தேடி அலைகின்றன
பறவைகள் சில
இறந்த மூளையை
புசித்துக் கொண்டிருக்கின்றன
புழுக்கள்

கைதவறி விழுந்துடைந்த
கண்ணாடித் தொட்டி மீனென
துடிக்கிறது இதயம்

தூக்கம் தடுக்கும்
மாத்திரையை
தேடியலைகிறேன்.

நன்றி- உயிரோசை

Friday, June 26, 2009

புன்னகை.

புத்தகமொன்றின் பின்னட்டையில்
வார இதழின் பக்கமொன்றில்
எப்பொழுதோ தொலைக்காட்சியில்
பார்த்திருக்கிறேன்

எதிரே வருவது
அவர் தானா ?
தெரியவில்லை

நான் புன்னகைக்க அவரும்
அவர் புன்னகைக்க நானும்
காத்துக்கொண்டிருந்தோம்

கடந்துவிட்டிருந்தோம்
இழப்பின் அதிர்வோடு
புன்னகைக்காமலே .

Sunday, June 21, 2009

நேரெதிர் பயணம்

சப்தமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன
இலைகள்

நிலவின் பாலொளி
சூழ்ந்திருக்கிறது

ஹார்மோன்களில்
மிதந்து கொண்டிருக்கிறது
மல்லிகை வாசனை

பட படத்துக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்

கண்களில் வழிந்த நீர்
கரைத்து விடுகிறது
இடைவெளியை

வேர்கள் அதிர
முத்தமிடுகிறார்கள்

கட்......கட்......கட்......
டேக் ஓகே
என்றான் சத்தமாக
தாடிவைத்த ஒருவன்

பிறகு
நேரெதிர் திசையில்
பயணிக்கிறார்கள்
இருவரும்.


Friday, June 12, 2009

உற்றுநோக்கிய பொழுது.

இரவில் பசித்த பூனையென
சத்தம் போடுகிறது

பழுத்து விழுந்த
இலையோடு காற்றில்
நடனமாடுகிறது

தவழும் குழந்தையோடு
மழலை நேசம் கொள்கிறது

முகத்தில் அப்பிய
துப்பட்டாவை இழுத்துச் சென்றவளோடு
தேநீர் அருந்துகிறது

அடர்ந்த இருளில்
ஜொலித்துக் கொண்டிருந்த
நெருப்பில்
விழுந்த வவ்வாலென
துடிக்கிறது

அடுத்த நிகழ்வுக்கான
அவதானிப்பு ஏதுமில்லை

சிவப்பிலிருந்து பச்சைக்கு
மாறுகிறது விளக்கு

மிக அருகில் கேட்கிறது
செல்லவேண்டிய
இரயிலின் சத்தம்.

Thursday, June 4, 2009

உயிர்ப்பை உணர்ந்த பொழுது.

திடீரென அடர்ந்த
இருளுக்குள் தள்ளிவிடப்படுகிறேன்.

மூச்சுத்திணற
அந்த குகைக்குள்ளிருந்து
வேகமாக வெளியேறுகிறேன்

எனக்காக
காத்திருந்த பாவனையில்
நின்ற எருமை
துரத்த ஆரம்பிக்கிறது

இறந்துபோன மூதாதையர்கள்
எனக்காக
பிரார்த்தனை செய்கிறார்கள்

முப்பாட்டியின்
சமாதியில் நிற்கும்
ஆலமரத்தின் விழுதொன்றால்
இறுக கட்டிவைக்கிறேன்
அந்த எருமையை

கதிரவன் மேனிதழுவ
துயிலெழுகிறேன்
கண்களை அகலவிரித்து
பெருமூச்சு விடுகிறேன்
கனத்து துடித்துக்கொண்டிருக்கிறது
இதயம்.

Tuesday, June 2, 2009

நம் வானில்.

உன்னோடு ஊடல்
கொண்ட பொழுதுகளில்
நிரம்பி வழிகிறது
வெறுமை

பூக்களின் பள்ளத்தாக்குகளை
நினைவு படுத்துகின்றன
பிரியத்தில் நீ
உதிர்த்த வார்த்தைகள்

அந்தரங்கங்களை
பேசிக்கொண்டிருந்த இரவுகளில்
தானாய் வழிகிறது
மேகம்

விடுமுறை நாட்களில்
வீடுவரும் பொழுதுகளில்
கருமேகமென திரண்டயென்னை
நிலமென உட்கொள்கிறாய்

பிறகு
வானவில்லின் நிறமுடுத்தி
மிதந்து கொண்டிருப்போம்
நம் வானில்.

Saturday, May 30, 2009

நின்ற அருவி.

மலையின் உச்சியில்
வழிந்த மேகம்
வேர்கள் நனைத்து
இலைகள் தழுவி
இடுக்குகளில் ஓடி
பிடிமானமற்று விழுகிறது

தாயின் உடலில்
சிதறிய நீரில்
குதுகலமாய் குளித்துக்கொண்டிருக்கிறாள்
சிறுமி

கம்பியை இறுகப்பற்றி
கண்கள் மூடி
தன்னுள் இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறாள்
தலை வெளுத்தவள்

பிறகு
ஈர உடலோடு
பிராத்தனை செய்கிறாள்
தாய்க்கும்
பிள்ளைக்கும்
ஆசீர்வாதம் செய்கிறாள்

சோர்ந்து சிவந்த
கண்களில் வழிந்து கொண்டிருக்கிறது

அவளுள் நின்ற அருவி.

Thursday, May 28, 2009

தாகம்.

நீர்
நிலம்
நெருப்பு
காற்று
ஆகாயம்
-----------------------------------------------
-----------------------------------------------
----------------------------------- என
எழுதியும்
வாசித்தும்
தீர்த்தாயிற்று

எவ்வளவு
குடித்தாலும்
அடங்குவதில்லை
தாகம்.

Friday, May 22, 2009

என் கடலும் அவனும்.

இருவரும் தனித்தனியே
கடலை
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம்

அவன் கடலில் நானும்
என் கடலில் அவனும்
மிதப்பதென்பது
சாத்தியமற்றது எப்போதும்

இந்த விதியை
உடைக்கும்
திராணியோ ,
அனுமதியோ ,
யாருக்கும் தரப்படவில்லை

என் கடலின்
ஓசையையும்
நிறங்களையும்
இட்டு நிரப்புகிறேன்
ஒரு ஊடகம் வழியே

நண்பா,
உன்னால் எப்படி சொல்ல முடிந்ததென்று
தெரியவில்லை
" இது உன் கடலின்
ஓசையும், நிறமும் இல்லை ?" என்று.

Thursday, May 21, 2009

பொக்கிஷம்.

வழக்கமாக வீட்டிற்கு வரும்
பேருந்து கடந்துவிட்டால்
பேருந்து நிறுத்தத்திலேயே
காத்துக்கிடப்பாள்
நான் வரும் வரை

கத்தரிக்காய் சுட்டு
பிசைந்து வைத்திருப்பாள்
எனக்கு பிடிக்குமென்று

மூக்குப்பொடி
வாசம் வீசும்
தன் மடியில் கிடத்தி
தூங்க வைப்பாள்

தெருவில்
யானையோ
சிங்கமோ
குரங்கோ
நிற்கிறதென
ஆச்சர்யமூட்டி
கண் விழிக்கச்செய்வாள்

யாருடைய கையிலும்
கடைசிவரை கிடைக்கவில்லை
பாட்டியின் சிவப்பு மூக்குத்தி

பத்திரமாக இருக்கிறது
என் மன அறையில்
ஒரு பொக்கிஷமாக.

Tuesday, May 19, 2009

உள்வெளி

இருள் சூழ்ந்த
கூண்டொன்றில்
தனிமையில் அடைத்து வைக்கப்படுகிறாய்

உனது
அந்தரங்கங்கள் கூட
அறியப்படுகின்றன
அசைவுகளின் அதிர்வுகளில்

அசைவற்று
கிடந்த பொழுதுகளில்
உனது உயிர்ப்பை
உறுதிபடுத்துகிறது
உள்வெளியில்
சுனையென திறந்து வழியும்
திரவத்தின் சலனம் .

Thursday, May 14, 2009

அன்பிற்கும் உண்டோ...

ஐந்து வினாடிகளே
மீதமிருந்தது.

வாகனங்களுக்கு இடையில்
நெளிந்து ஓடி
தடுப்புச்சுவர் மேல்
கால்வைத்த கணம்
நிலைகுலைந்துவிட்டேன்

அனிச்சையாக
பிடிக்கும் பாவனையில்
கை நீட்டினாள்
காருக்குள் இருந்து .

இன்னமும் தெரியவில்லை
அவளின் நேசத்தில் மிதந்தவன்
காயப்படாமல்
எப்படி சாலையை கடந்தேனென்று .

Monday, May 11, 2009

நித்தியத்துவத்தின் ஒளி

மேஜையின்
விளிம்பில் இருக்கிறது

முக்கோண வடிவிலானது

அதன்
பக்கங்கள் ஒரே அளவில்லானவை.

அறையில்
நிரம்பிய ஒளியை
தன்னுள் அனுமதிக்கிறது

உள்வாங்கி , கிரகித்து
வண்ணம் தருகிறது
அதனதன் குணங்களுக்கேற்ப

அறையின்
சுவர்களிள்
வர்ணஜாலம் காட்டுகிறது

ஒரு கலைப்படைப்பென
தன்னை சிருஷ்டித்துக்கொள்கிறது

பிறகு
பிரபஞ்சமெங்கும் வியாபிக்கிறது
நித்தியத்துவத்தின் ஒளியென.

Thursday, May 7, 2009

இந்த மனதிற்காக

எதிலும்
இருப்புக் கொள்ளாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
மனது

அவசியமின்றி
மூச்சுக்காற்றில் நிறைந்திருக்கிறது
கோபம்

தன்னை எதிர்க்காத
ஒருவனை
சளைக்காமல்
தாக்கிக் கொண்டிருக்கிறான்
சிறுவன் ஒருவன்
கணிப்பொறி விளையாட்டொன்றில்

நானும்
சிருஷ்டிக்கத் துவங்குகிறேன்
இப்பொழுது
எனக்கான ஒருவனை
இந்த மனதிற்காக.

Tuesday, May 5, 2009

பூக்கள்

உதிர்ந்த
பூக்கள்தான் என்றாலும்
கால்வைக்க முடிவதில்லை.

0
எப்படியாவது
சேகரித்து விடுகிறது
பூக்கள்
மழையின்
ஒரு துளியை
என் தலையில்
தெளிக்க.

0௦

இத்தனை
கனமாக இல்லை
கிளைகளுக்கு
காய்ப்பதற்கு முன்.

Monday, May 4, 2009

அந்தப் பாய்ச்சலில்...

எனது
இடுப்புயரம் இருந்தது
அந்த நாய்.

எச்சரிக்கும் தொனியோடு
சோதனை செய்தது
கடுஞ்சினத்தில் சிவந்த
அதன் கண்கள்
என்னுடனான
முதல் சந்திப்பில்


அந்த
அலுவலக நண்பர்
கைகுலுக்கியப் பின்பு
சாந்தமானது

மறுநாள்
பந்தைக் கவ்விக்கொண்டு
குழந்தையை நோக்கிய
அதன் பாய்ச்சலில்
மிளிர்ந்து கொண்டிருந்தது
பழகுவதிலும்
பழக்குவதிலும்
உள்ள நேசம்.

Thursday, April 30, 2009

மழையோடு

மழை பற்றிய
உரையாடல்

மழை பற்றிய
கவிதை

மழை பற்றிய
இசை

மழை பற்றிய
காட்சிகள்

மழையோடு
கழிகிறது
இந்தக் கோடை

வேண்டி ....

அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..

தாய் இருந்தும்
தந்தை இருந்தும்

உடைத்து விளையாட
பொம்மைகள் இருந்தும் .

அழுது கொண்டே இருக்கிறது
குழந்தை..

பிறந்தது முதல்
கேட்டுக்கொண்டிருந்த
துப்பாக்கிகளின்
சப்தம் வேண்டி .

அன்பின் குறிப்புக்கள்...

அடர்த்தியான
உன் மௌனத்தை
உடைத்துவிட்டது
அந்த இசை..

எனக்கான பாடலுக்கு
ஆலபனை செய்யத்
துவங்குகிறது
உன் இதழ்கள்..

0

எறும்புக் கண்ணினும்
நுண்ணிய துளையிலிருந்து
கசிகிறது
அடர்த்தியான உன் மௌனத்திலிருந்து
எனக்கான பாடல் .

தயக்கம் ..

இறுதிச் சந்திப்பிற்குப்
பின்னும்
உச்சரிக்கப்படாமல்
தங்கிவிட்டன
சில வார்த்தைகள்.

நிராகரிப்புகளைத் தாண்டி
உள்ளத்தின் ஓரிடத்தில்
உறைந்த வார்த்தைகள்
அழுத்திப் பிடித்திருக்கிறது
நம்மிடையேயான தொடர்பை
முடிவற்று நீளும்
காலம் போல..

பாதை..

பிணங்களின் குவியலைத் தாண்டி
கண்ணீரோடு வீட்டுக்கான
பாதையொன்றில் விரைகிறது

சிதைந்தது போக
மீந்து போன ஒற்றைக் கையை
கவ்விக்கொண்டு
அவன் வளர்த்த நாயொன்று

வெளியெங்கும் விரவிக்கிடக்கிறது
கசப்புத்தன்மையும்
வெறுப்புக்களும்

சிந்திய கண்ணீர்த்துளிகளும்
உரைந்த ரத்தமும்
மின்னிக் கொண்டிருக்கின்றன
இரவுகளில்.

கடலில் சேர்க்கிறது
கடலை நம்பி வாழ்த்த
அவர்களின் பாதை.

ஆறுதல் ...

தோல்விகளும்
அவமானங்களும்
அச்சுறுத்தல்களும்

வலியின் உக்கிரம்
தலைதூக்கும் போதெல்லாம்

தாயாய் அணைத்துக்கொள்ள
முன்வருகிறது
நட்சத்திரங்களுக்கு அப்பாலான
வெளியொன்று ...

தவிப்பு...

தீ நாக்குகள் மட்டுமே
நீண்டிருக்கும்
பெருவெளியொன்றில்
அகப்பட்டு
கிளைக்கும், நீருக்கும்
அலைக்கழியும் பறவையைப்
போலவே
பற்றுதல் ஒன்றிற்காக
அலைக்கழிகிறது மனது.

வருகை..

வழக்கமாக நீ
கடந்து செல்லும்
நதிக்கரை பாதையோரம்
காத்துக் கிடக்கிறேன்
மெய்ப்படவில்லை
உனது வருகை

வாசல் கதவு திறக்கப்படாத
பூக்கள் மொட்டவிழ்கிற
அதிகாலைப் பொழுதொன்றில்
வருகை புரிகிறாய்
என் அறை சாளரம்
வழி உட்புகுந்த
வண்ணத்துப் பூச்சி.

Monday, April 27, 2009

ஒத்ததிர்வு...

நாங்கள்
நண்பர்கள் தான்

எங்களின்
திசையும்
வெளியும்
வேகமும்
வேறு வேறானவை.

ஒரே நேர்கோட்டில்
சந்திக்க நேர்ந்த
எங்களின் வார்த்தைகள்
புன்னகையோடு
கைகுலுக்குகின்றன.

அந்த கணம்
உடைந்து விடுகிறது
எங்களிடையே சூழ்ந்திருந்த
மௌனம் .


Thursday, April 9, 2009

இங்கே நின்றுவிடுதல்.

இங்கேயே நின்று விடுகிறேனே ?

நடுநிசியில்
அடர்ந்த காட்டுக்குள்
விரட்டப்பட்டவனின் மனமென
பயம் ஆட்கொள்கிறது.

தோற்றுப் போன
மாவீரன் ஒருவனின்
கொடுஞ்சினமென பாய்கிறது
என்மீதான கோபம் .

இந்த கணம்
மரணமடைபவனின் இதயத்துடிப்பென
மிரள்கிறது
நம்பிக்கை தொலைத்து.

கோடையில்
சிறு பொழுதேனும்
பொழியும் மழையென
என்மீதான கருணை .

அடர்ந்து பறக்கும்
பறவைகளின்
சிறகு விசிறிவிட்ட
மென் காற்றென
திளைக்கிறது
மனது .

மஞ்சள் பூக்களை
உதிர்த்த மரம்
காதுக்குள் சொல்கிறது
இங்கேயே நின்றுவிடுதல்
உனக்குச் சாத்தியமற்றதென்று.

Thursday, April 2, 2009

பூரணம்

அமிலத்திற்கு
ஒப்பானது
துக்கம்

குவளையில்
சிறு சிறு
துளிகளாக

அன்பின் குளுமை
தணிக்கிறது

நேசம் தொலைத்த
பொழுதுகளில்
குவளை முழுவதும்
நிரம்புகிறது அமிலம்

உஷ்ணம் தாளாமல்
உடல் பிரியும் உயிர்
பிறகு
வைகுண்டம் சேர்க்கிறது

அமிலம்மின்றி
ஏது பூரணம் .


Wednesday, April 1, 2009

இறுதித் துளியை

கைப்பேசி வழியே
வருகிறது
மரணச் செய்தி ஒன்று
அதிகாலையில்

வாசல் செம்பருத்தி பூவின்
முகம் முழுவதும்
துக்கம்

துயரம் சூழ்ந்த
கண்ணீர் துளிகள்
வியாபித்திருக்கிறது
மௌனித்திருந்த
அறையெங்கும்

பாடை சுமந்தவர்கள்
உள்ளமெங்கும் நிரம்புகிறது
பயம் சூழ்ந்த
துக்கப் பெருவெளியொன்று

இப்பொழுது
நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பிரபஞ்சத்தின்
இறுதித் துளியை

Wednesday, March 25, 2009

அவனுக்குப் பிறகு ...

பிணவாடை மூச்சுத் திணற
தாளிடப்படாத அறைக்குள்
புகுந்தேன் .

உத்தரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தான் அவன் .

இரத்தம் கசியும் உடலோடு
அலறிக் கொண்டிருந்தன
அன்றைக்கு அவன் பிரசவித்த வார்தைகள் .

கிழக்கு மூலையில்
வார்த்தைகளை புசித்துக் கொண்டிருந்தது
அந்தக் கருப்புப் பூனை .

மிஞ்சியவைகளை
மீன்தொட்டியில் கழுவினேன்
வாய்பிளந்து
இரத்தம் சுவைத்தது
மீன்கள்

ஒவ்வொன்றாக கோர்த்து
மலையாகினேன்
சடலத்துக்கு

கவிதை என்றார் ஒருவர்
கோழையின் அழுகுரல்
என்றார் மற்றொருவர்

பூக்களின் வாசம்
என்றார் ஒருவர்
பிணக்குவியலின் துர்வாடை
என்றார் மற்றொருவர்

இன்னிசை
என்றார் ஒருவர்
இரைச்சலின் ஊற்றுக்கண்
என்றார் மற்றொருவர்

கடவுளின் அன்பு வெளி
என்றார் ஒருவர்
சாத்தானின் பிரவாகம்
என்றார் மற்றொருவர்

ஞானியின் சித்தாந்தம்
என்றார் ஒருவர்
பைத்தியக்காரனின் உளறல்
என்றார் மற்றொருவர்

அகோராத்திரத்தில்
பிரபஞ்சமெங்கும்
நித்தியத்துவத்தின் மேல்
ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன
அந்த வார்த்தைகள்...

Friday, March 20, 2009

வேறு வேறாக ...

இருவருக்கும் சேர்த்துதான்
பயணச்சீட்டு
வாங்கினாள்

இன்றைக்குத் துளிர்த்த
இலையின் நிறத்தை ஒத்த
புடவை அணிந்தவள்
ஜடையில் மல்லிகை


அதிகாலை வானத்தின்
நிறத்தை ஒத்த
சுடிதார் அணிந்தவள்
ஜடையில் கனகாம்பரம்

ஒருத்திக்கு மணம்
அடுத்தவளுக்கு நிறம்

அவரவர்
மணமும் நிறமும்
அவரவர்களுக்கு

நமக்குத்தான்
எல்லாமும்
வேறு வேறாக ...



Wednesday, March 18, 2009

சாட்சியாக..

நேற்றைக்கு போல்
இருப்பதில்லை
இன்றைக்கு

அதிகாலை வானமும்
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளையின் முகமும்
வாசல் முருங்கை மரமும்
மாரியம்மன் ஆலயமும்
பூக்காரியும்
மல்லிகைப் பூக்களும்
அந்தக் கவிதையின் வரியும்
நானும்
அவர்களும்
எல்லோரும்
எல்லாமும்
உருவாக்குதலோ
உருமாற்றுதலோ

காலக்கடவுளின்
சாட்சியாக...

தனிமையற்றது...

எதையாவது
பாடிக்கொண்டே இருக்கிறது
பியானோ

எதையாவது
வாசித்துக்கொண்டே இருக்கிறது
புத்தக அலமாரி

தண்ணிர் வடிந்துகொண்டே இருக்கிறது
இறுகமூடிய பின்பும்
குளியலறை குழாயில்

எதையாவது விவாதித்துகொண்டே இருக்கிறது
வந்தவர்கள் விட்டுச்சென்ற
வார்த்தைகள்

தனிமைகள் அற்றது
அறை ...

சிறுவனின் பரிசு

அதிகாலையில்
அறைக்கு வந்தான்
அடுத்த வீட்டு சிறுவன்.

இறகொன்றால்
பேசிக்கொண்டோ...
பாடிக்கொண்டோ...
சுவர் முழுதும் வரைந்தான்
வர்ணங்களின்றி

வெள்ளை முயலேன
துள்ளி ஓடினான்

பிறகு
மாலையில்
அறைதிறக்கும் போது
யாரும் பார்த்திராத
யாரும் கேட்டிராத
இசையில் மிதந்து கொண்டிருந்தன
பறவைகள்

Sunday, March 15, 2009

இறகின் இசை ....

அடை மழை நாளொன்றில்
அறைக்கு வந்தது
மின் விசிறியின் மேல் அமர்ந்து
உடல் உலுக்கியது.
மென்காற்றில் மிதந்து
மெதுவாக
அமர்ந்தது
நண்பனின் பியானோ மீது
ஒரு இறகு
பிறகு அறை முழுவதும்
வியாபித்து இருந்தது
இறகின் இசை .....

Saturday, March 7, 2009

குருவிகள் .....

அறையின் சாளரம்
திறக்கும் போது
கழுத்தை சுருக்கி
பறந்து விடுகின்றன
குருவிகள் ....
எப்படி சொல்லுவது
நான் தானென்று .....

அறையில் யாருமற்ற
பொழுதுகளில் கண்ணாடியை பார்த்து
கொத்தி கொண்டேயிருக்கின்றன

முகச்சவரம் செய்யும் போது உடைத்து விட்டது
இரண்டு நாட்களாக காணவில்லை
கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும்
குருவிகளுக்காக ...