Wednesday, March 25, 2009

அவனுக்குப் பிறகு ...

பிணவாடை மூச்சுத் திணற
தாளிடப்படாத அறைக்குள்
புகுந்தேன் .

உத்தரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தான் அவன் .

இரத்தம் கசியும் உடலோடு
அலறிக் கொண்டிருந்தன
அன்றைக்கு அவன் பிரசவித்த வார்தைகள் .

கிழக்கு மூலையில்
வார்த்தைகளை புசித்துக் கொண்டிருந்தது
அந்தக் கருப்புப் பூனை .

மிஞ்சியவைகளை
மீன்தொட்டியில் கழுவினேன்
வாய்பிளந்து
இரத்தம் சுவைத்தது
மீன்கள்

ஒவ்வொன்றாக கோர்த்து
மலையாகினேன்
சடலத்துக்கு

கவிதை என்றார் ஒருவர்
கோழையின் அழுகுரல்
என்றார் மற்றொருவர்

பூக்களின் வாசம்
என்றார் ஒருவர்
பிணக்குவியலின் துர்வாடை
என்றார் மற்றொருவர்

இன்னிசை
என்றார் ஒருவர்
இரைச்சலின் ஊற்றுக்கண்
என்றார் மற்றொருவர்

கடவுளின் அன்பு வெளி
என்றார் ஒருவர்
சாத்தானின் பிரவாகம்
என்றார் மற்றொருவர்

ஞானியின் சித்தாந்தம்
என்றார் ஒருவர்
பைத்தியக்காரனின் உளறல்
என்றார் மற்றொருவர்

அகோராத்திரத்தில்
பிரபஞ்சமெங்கும்
நித்தியத்துவத்தின் மேல்
ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன
அந்த வார்த்தைகள்...

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இதைக் கவிதை என்கிறேன் நான். சில எழுத்துப் பிழைகள் உண்டென்று தோன்றுகிறது. சரியா?

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

இந்தக் கவிதையை களைத்து விட்டு மீண்டும் அடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் .திரு. கோகுல் அவர்களும் , திரு. கழனியூரன் அவர்களும் வாசித்து விட்டு நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள் . இப்போது நீங்களும்.
பிழைக்கு வருந்துகிறேன் .
சரிசெய்து விடுகிறேன்.

மிக்க நன்றி .

-ப்ரியமுடன்,
பிரவின்ஸ்கா

venkatesh said...

மிக்க நன்று, உங்கள் கவிதைகளில் நாளுக்குநாள் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

"வார்த்தைகளை புசித்துக் கொண்டிருந்தது
அந்தக் கருப்புப் பூனை" நல்ல கற்பனை.

"பைத்தியக்காரனின் உளறல்" உளரலும் ஒருவகை உணர்வு
வெளிப்பாடு, அதனை கவிதையில் சேர்த்திருப்பது நன்று.

- வெங்கடேஷ்

பிரவின்ஸ்கா said...

மிக்க நன்றி நண்பா