Monday, March 25, 2013

பிடித்தம்

அஸ்கருக்கு
முகத்தில் பருக்கள் வந்திருக்கிறது

இப்போதெல்லாம் அவனுக்கு

செடிகள் வளர்க்கப் பிடிக்கிறது
பறவைகள் வளர்க்கப் பிடிக்கிறது
மீன்கள் வளர்க்கப் பிடிக்கிறது

கைப் பேசியில்
பாடல்கள் கேட்கப் பிடிக்கிறது

கைகளை காற்றில்
சிறகென விரித்து
சைக்கிளில் பறக்கப்  பிடிக்கிறது

வாப்பாவின் பைக்கை
யாருக்கும் தெரியாமல்
ஓட்டப்  பிடிக்கிறது

திருச்செந்தூர் பாசஞ்சரில்
சிகை பறக்க
காற்றோடு மோதும்
படிக்கட்டுப் பயணம்  பிடிக்கிறது

வீட்டில்
தனக்கென்று ஒரு அறை
வைத்துக்கொள்ளப்  பிடிக்கிறது

அதிக நேரம்
கண்ணாடி முன்னின்று
கவனமாக தனக்குப் பிடித்தமாதிரி
தலை வாரிக்கொள்ளப்  பிடிக்கிறது

எப்போதும்
கைகுட்டையோடு ஒரு சீப்பையும்
வைத்துக்கொள்ளப்  பிடிக்கிறது

கதீட்ரல் நிருத்தத்தில் இறங்கும்
எஸ்தரின் தலையிலிருந்து விழுந்துவிட்ட
ரோஜாப்  பூவும் பிடிக்கிறது.


நன்றி - உயிரோசை

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன சின்ன ஆசைகள் மிகவும் பிடிக்கிறது...

G K said...

அருமை தோழரே....
இயக்ககுநர் பாரதிராஜாவின் தொடுதல் தெரிகிறது....